Friday, February 13, 2009

நீதியின் மன்றத்தில்....


ஈழத்தீவை
சூழ்ந்திருப்பது
தண்ணீரல்ல ...
கண்ணீர்!!

எம் ரத்த
சொந்தங்களின்
உயிரடங்கும் ஓசை
செவிகளில் இரைச்சலாய் ....

சீதையை மீட்க
யுத்தம் அன்று;
சீதைகளை சிதைக்க
உதவி இன்று;
என்ன தேசம் ?
யார் ராஜ்ஜியம் ?

பிள்ளையைக் கொல்ல
கள்ளிப்பால் கொடுக்கும்
அன்னை...

பிள்ளைகளைக் கொல்ல
ஆயுதம் கொடுக்கும்
அன்னை தேசம் ...

நீதியின் மன்றம்
சொல்லட்டும்
ஒரே தீர்ப்பு...


14.12.2008. அன்று ராணி வார இதழில் வெளிவந்தது ....

ஈரத்தமிழன் முத்துக்குமாருக்கு வீர வணக்கம்..

நீ
இருண்டு கொண்டிருக்கும்
ஈழத்தமிழர்
வாழ்வு ஒளிபெற
எரிந்து போன
சந்தனக் காடு ..

நாங்கள்
குரல் கொடுத்தோம்..
நீ
உயிர் கொடுத்தாய் ..

எல்லோரும்
உறவுகள் பற்றித்
தெரிந்து கொண்டிருக்க
உனக்குள்
மட்டும் பற்றி
எரிந்து கொண்டிருந்தது
உணர்வுத் தீ !

உன்னைச் சுட்ட
நெருப்பின் வடு
எங்கள் இதயத்தில்...

உன் தியாகம்
எழுச்சி கொண்டு
மலரவேண்டும் தமிழீழம்
நாளைய உதயத்தில்...